தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு; அமைச்சர் தகவல்
By: Nagaraj Mon, 18 May 2020 7:16:18 PM
தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,760- ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,927-லிருந்து 96,169-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,872-லிருந்து 3,029-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 36,824-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் புதிதாக 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,406 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 234 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 81-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 61 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,270 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகரில் மட்டுமே 85,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.