சமூக விலகல், முகக்கவசம் தேவையில்லை என கூறி வந்த பிரேசில் அதிபருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Wed, 08 July 2020 09:35:25 AM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் நாடு உள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
பிரேசில் நாட்டு அதிபராக உள்ள ஜெய்ர் போல்சோனாரோ, கொரோனா பரவும் நிலையில் மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரசாரம் செய்தார். மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி இருந்தால், கொரோனா பாதிப்பை விட மோசமான பாதிப்பு பொருளாதார முடக்கத்தால் ஏற்படும் என்று கூறி மக்கள் சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட தொடர்ந்து பேசி வருகிறார்.
கொரோனா பரவும் நிலையில் ஜெய்ர் போல்சோனாரோ,வெளியே சென்றால் முகக்கவசத்தை அணிவதில்லை. இதனால் அவருக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால் தற்போது முகக்கவசம் அணிந்து வருகிறார். தற்போது போல்சோனாரோ கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதால், மருத்துவமனை பரிசோதனை செய்து கொண்டார்.
பரிசோதனை மேற்கொண்ட பின், வெளியில் வரும்போது என்னுடைய நுரையீரல் சுத்தமாக உள்ளதாக கூறினார். ஆனால் தற்போது அவரது பரிசோதனை முடிவில் அவருக்கு பாசிட்டிவ் என வந்துள்ளது. இருப்பினும் அவருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால், சிறப்பாக இருப்பதாக உணர்வதாகதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.