புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 163 ஆக உயர்வு
By: Monisha Fri, 12 June 2020 5:37:53 PM
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை கொரோனா வைரஸ் தொற்றால் 157 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 88 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 67 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது புதுச்சேரியில் புதிதாக 6 பேர் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி உட்பட 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 7 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஜிப்மரில் ஒருவரும், வெளி மாநிலத்தில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி காரைக்காலைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த 82 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 163 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 84 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது குணமடைந்தோர் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9,250 பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 8,979 பரிசோதனை நெகடிவ் என்று வந்துள்ளது. 104 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன. இவ்வாறு கூறினார்.