புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500ஆக உயர்வு
By: Monisha Thu, 25 June 2020 10:50:24 AM
புதுச்சேரியில் ஏற்கனவே கொரோனாவால் 461 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 4.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 14,894 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,42,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 2,865 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67,468 ஆகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 866 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் மாஹே பகுதிகளில் 32 பேருக்கும், காரைக்காலில் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் இதுவரை 176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.