சென்னை போலீசில் நேற்று புதிதாக 29 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு
By: Karunakaran Fri, 26 June 2020 1:43:21 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள்,சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் முன்னிலையில் நின்று பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு முன்னின்று பணிபுரிபவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை போலீஸ்துறையில் உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் ஆயுதப்படை போலீசார் வரை கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை போலீசில் ஏற்கனவே 976 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 29 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது, சென்னை போலீசில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 1,005 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் அதிகாரிகள் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய போலீசாரின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மயிலாப்பூர் உதவி கமிஷனர் நெல்சன், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி, மத்திய குற்றப்பிரிவு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, பழவந்தாங்கல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாமூண்டிஸ்வரி ஆகியோர் உள்பட 28 போலீசார் குணமடைந்து நேற்று மீண்டும் பணிக்கு திரும்பினர்.