காய்கறி வியாபாரிகள் 50 பேருக்கு கொரோனா அறிகுறி - பொதுமக்கள் பீதி
By: Monisha Thu, 02 July 2020 11:59:27 AM
திருச்சியில் காய்கறி வியாபாரிகள் 50 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 926 அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 701 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 369 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் திருச்சியில் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகளாக இருக்கும் 50 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டை மதுரம் மைதானத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 127 வியாபாரிகளுக்கு நடந்த பரிசோதனையில் 50 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் அவர்களின் சளி மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது.