திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 700 பேருக்கு கொரோனா பரிசோதனை
By: Monisha Sat, 06 June 2020 6:20:49 PM
திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை திருச்சியில் 80 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 112 ஆக உயர்ந்துள்ளது.
இதில் நேற்று ஒரே நாளில் 12 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக முதலில் 4 பி.சி.ஆர். கருவிகள் மட்டுமே இருந்தன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 500 முதல் 600 பேர் வரை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்தநிலையில் ரோட்டரி சங்கம் மூலம் ரூ.22 லட்சம் மதிப்பிலான நவீன பரிசோதனை எந்திரம் ஒன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
அதன் மூலம் நேற்று ஒரே நாளில் 700 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் இன்று பிற்பகலில் தெரியவரும்.