உலகம் முழுவதும் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு
By: Karunakaran Sat, 04 July 2020 11:28:14 AM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
இதனால் உலகின் பல்வேறு நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன. இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 81 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 270 பேருக்கு புதிதாக
கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 11 லட்சத்து 81 ஆயிரத்து 818 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புடைய 43 லட்சத்து 61 ஆயிரத்து 417 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 58 ஆயிரத்து 832 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை 62 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 5 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.