ராகவா லாரன்ஸ் ஆசிரமத்தில் உள்ளவர்களில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு
By: Nagaraj Tue, 26 May 2020 7:38:45 PM
நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்திவரும் ஆசிரமத்தில் உள்ள 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழ், ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமான இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவுவதில் இவருக்கு நிகர் இவர்தான் என்று கூறவேண்டும். அந்த அளவிற்கு மக்களுக்கு உதவி செய்துவருகிறார் லாரன்ஸ்.
கொரோனா ஊரடங்கு அறிவித்த பின்னர் மத்திய அரசு, மாநில அரசு, நடன கலைஞர்கள், ஊனமுற்றோர், துப்புரவு தொழிலாளர், ராயபுரம் மக்களுக்கு உதவி என இதுவரை பல கோடி ரூபாய்களை நன்கொடையாக கொடுத்துள்ளார் லாரன்ஸ். சேவைதான் கடவுள் என எப்போதும் கூறிவரும் இவர் சென்னை அசோக் நகரில் ஆதரவற்ற குழந்தைகள் தங்கும் விடுதி ஒன்றினை நடத்திவருகிறார்.
இந்த விடுதியில் தங்கியிருக்கும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 பேரில் 10 மாணவிகள், 5 மாணவர்கள், 3 பணியாளர்கள், 2 சமையல்காரர்கள் என மொத்தம் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.