சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களை அதிகமாக பாதிக்கும் கொரோனா வைரஸ்!
By: Monisha Mon, 18 May 2020 1:17:09 PM
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 212 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரை உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 48 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில், புதிதாக 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 4 பேர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் என்றும் மற்ற அனைவரும் வெளிநாடுகளை சேர்ந்தவர் எனவும் அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
மேலும் சிங்கப்பூரை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளர். இதனால் நாட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. பலியான அனைவருமே 58 வயதுக்கு அதிகமான முதியவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இதுவரை 28,038 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,111 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 17,881 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இந்த தகவல் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.