தலைமைச் செயலகம் செயல்பட தொடங்கிய 2 வாரங்களுக்குள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
By: Monisha Thu, 04 June 2020 09:42:23 AM
சென்னையில் தலைமைச் செயலகம் உள்பட தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களை கொண்டு கடந்த மே 18-ந் தேதி முதல் இயங்கி வருகின்றன. அரசு ஊழியர்கள் அனைவரும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுக்கணக்கு குழு பிரிவில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த அலுவலகம் மூடப்பட்டது.
ஆனால் அங்கு கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்தது. இதுவரை 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்-அமைச்சரின் செயலாளர் பிரிவில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஊழியர் என 2 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை, பொதுப்பணித்துறை, நிதித்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவோர் 30 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அலுவலக உதவியாளர், பிரிவு அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பணியில் உள்ளனர்.
இவர்களில் சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பலர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தொடங்கிய 2 வாரங்களுக்குள் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது, தலைமைச் செயலக ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.