விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
By: Monisha Tue, 06 Oct 2020 10:09:07 AM
விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,539 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 25 ஆயிரத்து 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 664 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 846 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 495 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 15 ஆயிரத்து 494 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 3 ஆயிரத்து 975 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 14 ஆயிரத்து 133 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 14 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,539 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 485 பேருக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக 5 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வந்தநிலையில் தற்போது 10 சதவீதத்திற்கும் குறைவாக மருத்துவ பரிசோதனை செய்யப்படும் நிலை உள்ளது.
கடந்த வாரங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 221 ஆக உயர்ந்துள்ளது.