கொரோனாவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்; முதல்வர் மம்தா வலியுறுத்தல்
By: Nagaraj Mon, 11 May 2020 7:58:22 PM
கொரோனாவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்... கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையாக போராடி வரும் தருணத்தில் மத்திய அரசு, அரசியல் செய்யக்கூடாது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாநில முதல்வர்களுடன் 5வது கட்டமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அவர் கூறியுள்ளதாவது:
கொரோனா வைரஸ் தாக்குதல் பரவாமல் தடுக்க நாங்கள் கடுமையாக போராடி வருகிறோம். மேற்குவங்கத்தை பொறுத்தவரையில் வெளிநாடுகளையும், பெரிய மாநிலங்களையும் எல்லையாக கொண்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை தடுப்பதில் கடுமையான சவால்கள் உள்ளன.
இருப்பினும் மாநில அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது. மத்திய அரசு, இந்த இக்கட்டான தருணத்தில் அரசியல் செய்யக்கூடாது, அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.