கொரோனா வைரஸ் மாயமாக போய் விடாது - உலக சுகாதார அமைப்பின் அவசரகால பிரிவு தலைவர்
By: Karunakaran Sun, 05 July 2020 5:29:51 PM
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சனையாக கொரோனா வைரஸ் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய தரவுகள்படி, நேற்று மதிய நிலவரப்படி கொரோனா பாதிப்பு உலகளவில் 1 கோடியே 11 லட்சம் என்ற எண்ணிக்கையை நோக்கி செல்வதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரேசில், ரஷியா, இந்தியா, பெரு, சிலி, இங்கிலாந்து, ஸ்பெயின், மெக்சிகோ, இத்தாலி ஆகிய 10 நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள் கொரோனா பரவலை தடுக்க பிறப்பித்த ஊரடங்கால் பலத்த பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. இதனால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் அவசரகால பிரிவு தலைவர் டாக்டர் மைக்கேல் ரேயான், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பு, பலி பற்றிய தரவுகள் என்ன சொல்கின்றன என்பதை கண்டுகொள்ளாமல் பல நாடுகள் புறக்கணித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த இன்னும் காலம் கடந்து விடவில்லை. நாடுகள் தங்கள் பொருளாதார இழப்புகளில் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப நல்ல பொருளாதார காரணங்கள் உள்ளன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவலை புறக்கணித்து விட முடியாது. இந்த பிரச்சினை, மாயமாக தொலைந்து போகாது என்று மைக்கேல் ரேயான் தெரிவித்துள்ளார்.