தமிழகத்தில் கொரோனா வைரஸ் முற்றவில்லை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
By: Monisha Tue, 02 June 2020 2:28:27 PM
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்று மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. இந்த 4 மாவட்டங்களில் தொற்று பரவலைத் தடுக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 56 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இறப்பு விகிதம் 0.80 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
பொதுவிநியோகத் திட்டத்தில் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்படுகின்றன. விலையில்லா சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சென்னையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு. வென்டிலேட்டர் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு தமிழகத்தில் கொரோனா முற்றவில்லை. கொரோனாவை தடுக்க ரேசன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க பரிசீலனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.