பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,14,992 ஆக அதிகரிப்பு
By: Monisha Mon, 01 June 2020 2:16:50 PM
உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு 62,67,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,73,961 பேர் உயிரிழந்துள்ளனர். 28,47,541 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
கொரோனா தொற்று எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் பிரேசில் மீது சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா பயணத் தடை விதித்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் கொரோனாவால் 16,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,14,992 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 29,341 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 2,06,500 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்”. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக சுமார் 20 லட்சம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பிரேசிலுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அலட்சியமாக நடந்து வருவதாக உலக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.