தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியது
By: Karunakaran Tue, 02 June 2020 7:26:15 PM
கொரோனா வைரஸ் தமிழகத்தில் தொற்றின் தாக்கத்தை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி வருகிறது, இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சுகாதார துறை அதிகாரிகளோ என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி கொண்டு இருக்கின்றனர்.
கடந்த மாதம் 29-ந்தேதி 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மே 30-ந்தேதி 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று முன்தினம் (மே 31-ந்தேதி) 1149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்தது.
நேற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்தது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 3-வது நாளாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. இன்று 536 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் 13,706 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இப்படியாக நாளுக்கு நாள் ஆயிரமாக அதிகரித்து வருவதால் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வெளியே வரவேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.