இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3.66 லட்சமாக உயர்வு
By: Karunakaran Thu, 18 June 2020 1:07:58 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ்தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாலும், கொரோனா பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோரின் எண்ணக்கையும் அதிகரித்துள்ளது சற்று ஆறுதலை தந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 366946 ஆக அதிகரித்துள்ளது எனவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 334 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் மொத்தம் 12237 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதில் இதுவரை 194325 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 10215 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 160384 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 116752 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 50193 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், டெல்லியில் 47102 பேருக்கும், குஜராத்தில் 25093 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.