கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று
By: Nagaraj Thu, 09 July 2020 8:34:40 PM
அதிகரித்த வண்ணம் இருக்கும் கொரோனா... கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாகக் கடந்த ஒரு வாரமாக தினமும் 50 பேர் முதல் 100 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் வெகு அச்சத்தில் உள்ளனர்.
நாகர்கோவில் வடசேரி சந்தை, ஒழுகினசேரி அப்டா சந்தை, கோட்டாறு மார்க்கெட் என மக்கள் கூடும் பகுதிகளில் வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்களுக்கும் கொரோனா வேகமாகப் பரவியது. இதைப்போல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், மருத்துவமனை என மக்கள் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 100 பேருக்கு மேல் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதித்தோர்
எண்ணிக்கை 1000 பேரைத் தாண்டியுள்ளது. இதுவரை கொரோனா பாதித்த 5 பேர்
உயிரிழந்துள்ளனர். புதிதாகக் குளச்சல் சந்தை, பேருந்து நிலையம் மூலம்
கொரோனா பரவுவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சந்தையும், பேருந்து நிலையமும்
மூடப்பட்டன.
குமரி மாவட்டத்தில் கொரோனா அதிவேகமாகப் பரவி வருவதால்
மாவட்டம் முழுவதும் உள்ள மொத்த விற்பனைச் சந்தைகளைத் தற்காலிகமாக மூடி,
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கொரோனா
கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னரே சந்தைகள் திறக்கப்படும். விதிமுறையை மீறி
சந்தைப் பகுதிகளில் கடைகளைத் திறப்போர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.