நிதி ஆயோக் அலுவலக அதிகாரிக்கு கொரோனா தொற்று; அலுவலகத்திற்கு சீல்
By: Nagaraj Mon, 01 June 2020 7:43:49 PM
நிதி ஆயோக் அலுவலக அதிகாரி மற்றும் ஐசிஎம்ஆர்., விஞ்ஞானி ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த இரண்டு அலுவலகங்களும் சீல் வைக்கப்பட்டு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலையில், 1.90 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டில்லியில் உள்ள நிதி ஆயோக் அலுவலகத்தில் அலுவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், அந்த அலுவலகத்தின் 3வது மாடி சீல் வைக்கப்பட்டு, தூய்மைப்பணி நடந்து வருகிறது.
முன்னதாக இந்த வாரம், வெளியுறவு அமைச்சகத்தில் பணிபுரிந்த இருவருக்கு கொரோனா உறுதியானது. அதில், ஒருவர், வெளியுறவு அமைச்சகத்தில் மத்திய ஐரோப்பிய பிரிவில் ஆலோசகராகவும், மற்றொருவர் சட்ட அலுவலராகவும் பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கொரோனா தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கி வரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர் மும்பையில் இருந்து டில்லி வந்துள்ளார். கொரோனா அறிகுறி தென்படவே, அவருக்கு பரிசோதனை நடந்தது. இதில் கொரோனா உறுதியானது.
தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைபடுத்தி கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐசிஎம்ஆர் அலுவலகத்தில் நடந்த சில கூட்டங்களில் அந்த விஞ்ஞானி கலந்து கொண்டுள்ளார். இதனால், அந்த அலுவலகம் சீல் வைக்கப்பட்டு தூய்மை பணி நடந்து வருகிறது.