வளைகுடா நாடுகளில் கொரோனா தொற்று ஒரு மாதத்தில் இரு மடங்காக உயர்வு
By: Monisha Sat, 27 June 2020 12:53:09 PM
வளைகுடா நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒரு மாதத்தில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் ஆகிய வளைகுடா நாடுகளில் கொரோனா எண்ணிக்கை கடந்த மே மாத இறுதியில் 2.3 லட்சம் அளவில் இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் தொற்று எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 900-ல் இருந்து 400 ஆகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து நடைமுறையில் இருந்து வந்த இரவு நேர ஊரடங்கை கடந்த புதன்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியது.
இதே போன்று, சவுதி அரேபியா மூன்று மாதமாக நடைமுறைப்படுத்திய ஊரடங்கை கடந்த ஞாயிறு அன்று முழுமையாக நீக்கியது. வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியாவில்தான் அதிகமாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரையில் அங்கு கொரோனா தொற்று 1.71 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 1,428 பேர் கொரோனா வைரஸால் பலியாகியுள்ளனர்.
சவுதி அரேபியாவைத் தொடர்ந்து கத்தாரில் 91,838 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 106 பேர் உயிரிழந்துள்ளன.
துபாயில் வணிக வளாகங்கள், விடுதிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. ஜூலை 7-ம் தேதி முதல் வெளிநாட்டு விமானச் சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் குவைத்தில் மட்டும் ஊரடங்கு இன்னும் தொடர்கிறது.