கர்நாடகத்தில் ஒரே நாளில் 453 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
By: Karunakaran Mon, 22 June 2020 12:59:32 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை அதிகரிப்பாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 8,561 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அங்கு புதிதாக 453 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9,014 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் இதுவரை 5,618 பேர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கொரோனாவுக்கு நேற்று பெங்களூருவை சேர்ந்த 53 வயது பெண், 62 வயது முதியவர், 55 வயது நபர், பீதரை சேர்ந்த 70 வயது முதியவர், 46 வயது நபர் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் இதுவரை 5 லட்சத்து 6 ஆயிரத்து 765 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை இல்லாத புதிய உச்சமாக பெங்களுருவில் நேற்று ஒரே நாளில் 196 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பெங்களூரு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அடுத்து வரும் நாட்களில் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், உள்விளையாட்டு அரங்கங்கள் மற்றும் ரவிசங்கர் குருஜி ஆசிரமம் ஆகிய இடங்களில் 3 தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.