இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.73 லட்சமாக உயர்வு
By: Monisha Sat, 30 May 2020 10:34:12 AM
சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. எனினும் நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகரிக்க, அதிகரிக்க, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1லட்சத்து 73ஆயிரத்து 763 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7964 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 265 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4971 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 82370 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 11264 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 86422 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 62228 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 20246 பேருக்கும், குஜராத்தில் 15934 பேருக்கும், டெல்லியில் 17386 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.