கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டே வந்து விடும் - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
By: Karunakaran Sat, 20 June 2020 12:46:19 PM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. எப்பொது இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என உலக மக்கள் ஆவலுடன் உள்ளனர். பல்வேறு நாடுகள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 6 மாத காலத்திலேயே கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 85 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. மேலும் இதனால் 4.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் உலகமெங்கும் சராசரியாக சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் 1 கோடி பேருக்கு கொரோனா ஏற்படும். தடுப்பூசியைத்தவிர கொரோனாவுக்கு வேறு தீர்வு ஏதும் இல்லை. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில் அதன் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், தடுப்பூசி விவகாரம் குறித்து நம்பிக்கையூட்டும் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று முன்தினம் சவுமியா சுவாமிநாதன் பேட்டி அளித்தபோது, உலகமெங்கும் உள்ள விஞ்ஞானிகள் 200-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை கண்டுபிடித்து அதனை சோதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த 200 தடுப்பூசிகளில் சுமார் 10 தடுப்பூசிகள் ஆரம்ப கட்ட பரிசோதனைகள் முடிந்து, மனிதர்களுக்கு செலுத்தி சோதித்துப்பார்க்கிற நிலைக்கு வந்து விட்டது. இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக ஒன்றல்லது இரண்டு வெற்றிகரமான தடுப்பூசிகள் வந்து விடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் 20 கோடி டோஸ் தடுப்பூசி கிடைத்து விடும் என்ற கணிப்பில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் செயல்படுகிறோம். அடுத்த ஆண்டு ஒன்று முதல் மூன்று வரையிலான பயனுள்ள தடுப்பூசிகளின் 200 கோடி டோஸ் வினியோகத்துக்கு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தடுப்பூசிக்கு தேவையான அனைத்து முதலீடுகளும் செல்வதால், அடுத்த ஆண்டின் இறுதிக்குள் நம்மிடம் 200 கோடி தடுப்பூசி டோஸ்கள் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.