சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து விலகிய தம்பதியர் போலீசில் சரண்
By: Karunakaran Thu, 09 July 2020 11:37:59 AM
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள விடாமல் அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் என பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை ஒடுக்க சிறப்பு காவல் படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், மாவோயிஸ்டுகள் வன்முறையை கைவிட்டு சரண் அடைந்தால் அவர்கள் திருந்தி வாழவும், அவர்களின் மறுவாழ்வுக்கும் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில் தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்திற்காக வேலை செய்து வந்த கணவன், மனைவி இருவரும் மாவோயிஸ்ட் இயக்கத்திலிருந்து விடுபட்டனர். அதன்பின், மாவட்ட எஸ்பி அபிஷேக் பல்லவ் முன்னிலையில் நேற்று சரண் அடைந்தனர்.
வன்முறை பாதையை கைவிட்டு திருந்தி வாழ விரும்புவதாக இருவரும் மாவட்ட எஸ்பியிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மாவோயிஸ்டுகள் சரண் அடைவதற்கான சிறப்பு இயக்கத்தை தொடங்கிய சில நாட்களில் 28 மாவோயிஸ்டுகள் சரண் அடைந்துள்ளதாக எஸ்பி அபிஷேக் பல்லவ் தெரிவித்துள்ளார்.