முன்னாள் பிரதமர் இம்ரானுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்
By: Nagaraj Sun, 19 Mar 2023 4:35:36 PM
லாகூர்: ஜாமீன் வழங்கியது... பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் ஜாமீன் வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிரசாரத்தின் போது நீதித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டிய வழக்கு, இம்ரான் கான் பிரதமராக இருந்த போது வெளிநாட்டு பயணத்தின் போது முக்கிய பிரமுகர்களிடம் இருந்து பெற்ற பரிசுகளை முறைகேடாக பயன்படுத்தியது உள்ளிட்ட 9 வழக்குகள் இம்ரான் கான் மீது உள்ளன.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இம்ரான் கானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க பாகிஸ்தான் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து இம்ரான் கானை இந்த வழக்கில் கைது செய்ய பாகிஸ்தான் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். இதையடுத்து இம்ரான் கானின் இல்லத்தை அவரது ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால், அங்கு வன்முறை வெடித்தது.
அப்போது செய்தியாளர்களிடம் இம்ரான் கூறுகையில், தன்னை கடத்திச் சென்று படுகொலை செய்ய பாகிஸ்தான் போலீசார் திட்டமிட்டுள்ளனர் என்றார். இந்நிலையில் இம்ரான் கான் மீதான 9 வழக்குகளில் இருந்து ஜாமீன் கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அனைத்து வழக்குகளிலும் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இந்த உத்தரவை தொடர்ந்து இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.