காவல்துறை பாதுகாப்பு குறித்து வரும் 2ம் தேதிக்குள் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு
By: Nagaraj Thu, 26 Nov 2020 4:19:19 PM
டிசம்பர் 2ம் தேதிக்குள் முடிவெடுக்க கெடு... காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து வரும் டிசம்பர் 2-ம் தேதிக்குள் முடிவெடுக்க ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்கும் விவகாரத்தில், ஜெ. தீபா மற்றும் தீபக் ஆகியோரை சட்டபூர்வ வாரிசுகளாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. மேலும், அவர்கள் அறக்கட்டளை தொடங்கவும், பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும்
எம்.எஸ் ரமேஷ் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெ.
தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க
முன்பணமாக ரூ. 20.80 லட்சம் வழங்க வேண்டும் என காவல்துறை தெரிவித்தும்
அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இது
தொடர்பாக இறுதி முடிவு எடுக்க, ஜெ.தீபாவும், தீபக் ஆகியோருக்கு டிசம்பர்
2-ம் தேதி வரை கெடு விதித்து நீதிபதிகள் வழக்கை தள்ளி வைத்தனர். தனது
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக, ஜெ.தீபா அண்மையில் கூறியது
குறிப்பிடத்தக்கது.