Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விளையாட்டு கலாசாரம் ஒன்றை உருவாக்குவது காலத்தின் தேவை; ஜனாதிபதி தகவல்

விளையாட்டு கலாசாரம் ஒன்றை உருவாக்குவது காலத்தின் தேவை; ஜனாதிபதி தகவல்

By: Nagaraj Thu, 17 Sept 2020 7:39:01 PM

விளையாட்டு கலாசாரம் ஒன்றை உருவாக்குவது காலத்தின் தேவை; ஜனாதிபதி தகவல்

காலத்தின் தேவை... ஆரோக்கியமான, ஒழுக்கநெறி கொண்ட மற்றும் சக்திமிக்க சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காக விளையாட்டு கலாசாரம் ஒன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

விளையாட்டு என்பது இளைஞர் சமூகத்தின் மொழியாகும். கல்விக்கு இணையாக பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபடுத்துவதன் மூலம் பூரணத்துவமான மனிதனை சமூகத்திற்கு வழங்க முடியுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சுக்களுக்கு அதற்காக பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளில் விளையாட்டுத்துறையில் திறமைகளை வெளிக்காட்டும் பிள்ளைகளை சிறுவயது முதல் தெரிவு செய்து அவர்களுக்கு அவசியமான உரிய போசாக்கு, தேசிய மற்றும் சர்வதேச பயிற்சிகள் உள்ளிட்ட வசதிகளை வழங்கக்கூடிய நிகழ்ச்சித்திட்டங்களின் அவசியம் பற்றியும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

sports,school,discussion,president ,விளையாட்டு, பாடசாலை, கலந்துரையாடல், ஜனாதிபதி

கிராமிய பாடசாலைகளுக்கு விளையாட்டு மைதானங்களை பெற்றுத் தருமாறு கேட்டாலும் அவற்றை அமைத்துக் கொடுத்ததற்குப் பின்னர் ஒழுங்காக பராமரிக்காத நிலை பல்வேறு இடங்களில் காணப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

புல் வெட்டுதல் போன்ற மிக இலகுவாக செய்யக்கூடிய பராமரிப்பு விடயங்களுக்கு பாரிய நிதி தேவையில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்காக தனியானதொரு பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

விளையாட்டு மைதானங்களை பராமரிக்கும் இயலுமை உள்ளூராட்சி மன்றங்களுக்கு உண்டு. இரண்டு மாதங்களுக்குள் நாடு பூராகவும் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களையும் நேர்த்தியாக சுத்தப்படுத்தி தருமாறு பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

கொழும்பு – 07, டொரின்டன் மாவத்தையில் அமைந்துள்ள தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தை தியகம விளையாட்டு தொகுதி வளாகத்துடன் இணைத்து சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

விளையாட்டு கலாசாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக சிறு பிள்ளகைள் விளையாடுகின்ற இடங்களை தேடிச் சென்று விளையாட்டு மைதானங்களை அமைக்க வேண்டுமென்று நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார். பிரதான விளையாட்டு மைதானங்களை ஒரு நிறுவனத்தின் கீழ் நிர்வகித்தல், முழுமையான வசதிகளைக்கொண்ட விளையாட்டுப் பாடசாலைகள் 25 ஐ உருவாக்குதல், விளையாட்டு சட்டத்திற்கு புதிய முன்மொழிவுகளை உள்ளடக்குதல் மற்றும் புதிய சட்டமொன்றை தயாரித்தல், விளையாட்டின் மேம்பாட்டிற்காக தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக கடந்த மாதத்தில் தமது அமைச்சு அவதானம் செலுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்

ஒலிம்பிக் பதக்கத்தை வெற்றிகொள்ளக்கூடிய விளையாட்டாக இனங்காணப்பட்டுள்ள ஈட்டி எறிதல் மற்றும் இலக்கு பார்த்து சுடுதல் போன்ற விளையாட்டுக்களை பாடசாலை மட்டத்திலிருந்து மேம்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Tags :
|
|