- வீடு›
- செய்திகள்›
- கடுமையான வானிலையை எதிர்கொள்ளும் கடலூர் துறைமுகம்; 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கடுமையான வானிலையை எதிர்கொள்ளும் கடலூர் துறைமுகம்; 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
By: Monisha Tue, 24 Nov 2020 4:46:04 PM
கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அடுத்தடுத்து வலுவடைந்து தீவிர புயலாக மாறி நாளை மாமல்லபுரம்-காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இந்த புயலுக்கு நிவர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதையொட்டி கடலூர் துறைமுகத்தில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நிவர் புயல் தற்போது தீவிரம் அடைந்து சென்னையில் இருந்து 450கி.மீ. தொலைவில் உள்ளது. மணிக்கு 5கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதலே பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதைத்தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் இன்று காலை 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நிவர் புயல் இந்த துறைமுகத்தை நெருங்கும் அல்லது இதற்கு அருகே கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயலால் ஏற்படும் கடுமையான வானிலைக்கு கடலூர் துறைமுகம் உட்படும் என்பதற்கு அடையாளமாக 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.