கொரோனா அதிகரித்துள்ளதால் மகாராஷ்டிராவில் ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
By: Karunakaran Thu, 30 July 2020 11:13:05 AM
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், கொரோனா பரிசோதனை அதிகரிப்பாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலம் உச்சத்தில் உள்ளது.
மகாராஷ்டிராவில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஆகஸ்ட் 1 முதல் மூன்றாம் கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கு ஆகஸ்டு 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குடன் புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்டு 5 முதல் ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேலும், இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேலும் பங்கேற்கக் கூடாது எனவும், அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்றுதல் போன்ற உத்தரவுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.