- வீடு›
- செய்திகள்›
- கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் காரணமாக ஊரடங்கு அமல்
கருப்பின வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடந்த போராட்டம் காரணமாக ஊரடங்கு அமல்
By: Karunakaran Thu, 29 Oct 2020 12:32:42 PM
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் கடந்த 26-ம் தேதி கருப்பின வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அங்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் 2 பேர் அந்த வாலிபரிடம் துப்பாக்கியை காட்டி கத்தியை கீழே போடும்படி எச்சரித்தனர். ஆனால் அந்த வாலிபர் போலீசாரை நோக்கி முன்னேறி வந்ததால் அதிகாரிகள் 2 பேரும் அவரை துப்பாக்கியால் பலமுறை சுட்டனர்.
அதன்பின், போலீஸ் அதிகாரிகள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். விசாரணையில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கருப்பின வாலிபரின் பெயர் வால்டர் வாலஸ் (வயது 27) என்பது தெரியவந்தது. இந்நிலையில் போலீஸ் அதிகாரிகளால் கருப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் பிலடெல்பியா முழுவதும் காட்டுத்தீ போல பரவியதையடுத்து, நூற்றுக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போலீசாருக்கு எதிராக போராடினர்.
இந்தப் போராட்டத்தில் கற்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றால் போலீசாரை தாக்கிய போராட்டக்காரர்கள் போலீசாரின் கார்களுக்கும் தீ வைத்தனர். பல்வேறு கடைகள் சூறையாடப்பட்டன. கடைகளில் இருந்த பொருட்கள் போராட்டக்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதனால் பென்சில்வேனியா நகரமே வன்முறை களமாக மாறியது. இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரிகள் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
தற்போது போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் விதமாக பிலடெல்பியா நகரம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பிலடெல்பியா நகரமே பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் கையில் கத்தியுடன் சுற்றிய வால்டர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியிலும் பேசுபொருளாகியுள்ளது. வரும் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இவ்விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது.