கர்நாடகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு இனி தேவை இல்லை-எடியூரப்பா
By: Karunakaran Wed, 17 June 2020 10:49:42 AM
இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய,மாநில அரசுகள் போராடி வருகின்றன.
பெங்களூருவில் உள்ள சங்கர மடத்திற்கு வந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் அவர் பேட்டி அளித்தபோது, கர்நாடக அரசின் நிதி நிலை மோசமாக இருந்த நிலையிலும் ரூ.1,000 கோடி விடுவித்துள்ளேன். பிரதமர் சம்மான் திட்டத்தின் கீழ் 50 லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 விடுவித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், பிரதமருடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாட உள்ளதில் ஊரடங்கை மேலும் தளர்த்துமாறு கேட்க உள்ளேன். கர்நாடகத்திற்கு இனி ஊரடங்கு தேவை இல்லை. பொதுமக்கள் எந்த தொந்தரவும் இன்றி தங்களின் இயல்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாகவும், இதை மேலும் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரசை தடுக்க மாநில அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கடுமையான முறையில் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.