தமிழக அரசுக்கு ஊரடங்கை பரிந்துரைக்கவில்லை; மருத்துவ வல்லுநர்கள் குழு தகவல்
By: Nagaraj Mon, 29 June 2020 5:55:27 PM
பொதுமுடக்கத்தின் மூலம் கொரோனாவை ஒழிக்க முயற்சிப்பது கோடாரியை கொண்டு கொசுவை ஒழிக்க முயற்சிப்பது போன்றது. தமிழக அரசுக்கு ஊரடங்கை பரிந்துரைக்கவில்லை என மருத்துவ வல்லுநர்கள் குழு தெரிவித்துள்ளது.
ஐந்தாவது கட்டமாக நீட்டிக்கப்பட்ட, பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. மேலும், பாதிப்பு அதிகம் உள்ள, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் முழுஊரடங்கும் நாளையுடன் நிறைவடைகிறது.
திருச்சி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வார காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை கண்காணிக்கவும், அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் அமைக்கப்பட்ட மருத்துவ வல்லுனர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, மருத்துவ வல்லுநர் குழுவினர் செய்தியாளர்களை
சந்தித்தனர். தமிழகத்தில் பரிசோதனைகளின் எண்ணிக்கை 32 ஆயிரமாக
அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலையிலும்
கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
ஊரடங்கை பரிந்துரைக்கவில்லை. அதுவே நிரந்தர தீர்வாகி விடாது.
பொதுப்
போக்குவரத்து, பல மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதற்கு காரணமாகி
விட்டது. அதைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். பொதுமுடக்கத்தின் மூலம்
கொரோனாவை ஒழிக்க முயற்சிப்பது கோடாரியை கொண்டு கொசுவை ஒழிக்க முயற்சிப்பது
போன்றது.
தமிழகத்தைப் பொறுத்தவரை விரைவுச் சோதனைகள் தேவையில்லை
என்றும், ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளே சிறந்தது, அதற்கு தேவையான வசதிகள்
உள்ளது என்றும், பொதுமுடக்கம் நீட்டிப்பா? கட்டுப்பாடுகள்
அதிகப்படுத்தப்படுமா? என்பதை தமிழக அரசு தான் முடிவெடுக்கும் என்று
மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.