ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமல்
By: Monisha Wed, 17 June 2020 09:35:38 AM
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41 லட்சத்து 78 ஆயிரத்து 877 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4 லட்சத்து 37 ஆயிரத்து 486 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் உள்ளது. இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இரு மாதங்களுக்குப் பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து ரஷ்யா செய்தி நிறுவனங்கள் கூறியதாவது:- கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு இரு மாதமாக ரஷ்யாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள மாஸ்கோவில் ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமலாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மியூசியம் மற்றும் உணவு விடுதிகள், சரணலாயங்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 5,45,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7,284 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ரஷ்யா உள்ளது.