பிபர்ஜாய் புயல் மிக தீவிர புயலாக வருகிற 15ம் தேதி கரையைக் கடக்கும்
By: vaithegi Sun, 11 June 2023 10:24:05 AM
சென்னை: தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த ஜூன் 6-ம் தேதி அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே இடத்தில் மையம் கொண்டிருந்தது. அதன் பின்னர் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.
இதையடுத்து இந்த புயலுக்கு வங்கதேசம் வழங்கியுள்ள 'பிபர்ஜாய்' என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும்.இந்த புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது எனவும், இப்புயல் காரணமாக கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இந்நிலையில், பிபர்ஜாய் புயல் அடுத்தடுத்து மேலும் தீவிரமடைந்து வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. எனவே அதன்படி பிபர்ஜாய் புயல் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், மேலும் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்து உள்ளது.
மேலும் தற்போது இந்த புயல் மும்பைக்கு சுமார் 600 கிலோமீட்டர் மேற்கிலும், கராச்சிக்கு தெற்கே 830 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருக்கிறது. இது மிகக் கடுமையான சூறாவளி புயலாக "பிபோர்ஜாய்" வலுப்பெற்று கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து வருகிற ஜூன் 15 ந்தேதி பிற்பகலில் பாகிஸ்தான் மற்றும் அதை ஒட்டிய சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. புயல் எச்சரிக்கை காரணமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்து கொண்டு வருகின்றனர்.