அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜாய்’ புயல் நேற்று நள்ளிரவில் கரையை கடந்தது
By: vaithegi Fri, 16 June 2023 11:17:10 AM
இந்தியா: அரபிக்கடலில் உருவாகி 10 நாட்கள் பயணம் செய்த பிபார்ஜாய் புயல் நேற்று நள்ளிரவு வடகிழக்கு நோக்கி நகர்ந்து சௌராஷ்டிரா-கட்ச் பகுதியை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரைக்கும், குஜராத்தின் ஜகாவ் துறைமுகத்திற்கும் அருகே கரையை கடந்தது.
இதையடுத்து இப்போது கடலிலிருந்து நிலத்திற்கு நகர்ந்து சௌராஷ்டிரா-கட்ச் நோக்கி மையம் கொண்டுள்ளது. இதனால், இன்று ராஜஸ்தானில் கனமழை பெய்யக்கூடும். மேலும், குஜராத்தின் மேற்கு கடற்கரையில் பலத்த மழை, புயல் அலைகள் சேதத்தை ஏற்படுத்தியது.
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும், 22 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த புயல் இன்று காலை வலுவிழந்தாலும், மழை நீடிக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
புயல் கரையை கடக்கும்போது, மேலும், காற்றின் வேகம் மணிக்கு 115-125 கிலோமீட்டர் (கிமீ) வேகத்தில் வீசியதால், மரங்கள் விழுந்து, மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்து, சாலைகள் துண்டிக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மின் விநியோகம் தடை ஏற்பட்டது. இதனால், இரவு சுமார் 524 கிராமங்கள் இருளில் மூழ்கின.
மேலும் குஜராத்தின் பாவ்நகர் நகருக்கு அருகே வெள்ளம் நிறைந்த ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட தந்தை மற்றும் அவரது மகனும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் அவர்களது 20 ஆடுகளும் பலியாகின. இந்த ஆடுகளை காப்பாற்ற முயன்றபோது தான் இந்த துயரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.