ஒடிசா, ம.பி.,யில் வெளுத்து வாங்கும் மழையால் அணைகள் திறப்பு
By: Nagaraj Fri, 28 Aug 2020 5:16:46 PM
அணைகள் திறப்பு... ஒடிசா, ம.பி.யில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் நிரம்பி வரும் அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. குஜராத் மாநிலம், கொங்கன் - கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிராவில் பரவலாக கனமான முதல் மிக கன மழை வரை பெய்கிறது.
பல இடங்களில் சாலைகள், பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 7 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில்
தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவின் மயூர் பஞ்ச் மாவட்டத்தில் 3 நாட்களில் 7
பேர் உயிரிழந்துள்ளனர். ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அணைகள்
அனைத்தும் திறந்து விடப்பட்டு கூடுதல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஜம்முவில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியுள்ளது.
மத்தியபிரதேசத்திலும்
மழை வெளுத்து வாங்கி வருகிறது. அம்மாநிலத்திலும் ஆறுகளில் தண்ணீரை
கரைபுரண்டு ஓடுவதால் அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன. ஹோஷியங்காபாத்தில்
உள்ள தவா அணையின் 10 கதவுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
டெல்லியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.