கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதால், நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது
By: Nagaraj Thu, 29 June 2023 7:46:30 PM
கொழும்பு: எந்த பாதிப்பும் ஏற்படாது... கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதால், நாட்டுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதை ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு குறித்து, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தும் கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மத்திய வங்கியின் ஆளுநர், கடன் மறுசீரமைப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படப் போகிறது என்பதை விளக்கமளித்தார்.
வெளிநாட்டுக் கடன் தொகையாக 49 ஆயிரம் மில்லியன் டொலர் நிலுவையில் உள்ளது. 17 வீத சலுகையை நாம் கடன் வழங்குனர்களிடம் கோரியுள்ளோம். இதன்போதுதான், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு எமக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
உள்நாட்டுக் கடனாக 7 ஆயிரம் மில்லியன் அளவில் காணப்படுகிறது. ஆனால், கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதை ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.