டீசல் மீதான வாட் வரி குறைக்க முடிவு; டில்லி முதல்வர் அறிவிப்பு
By: Nagaraj Fri, 31 July 2020 09:07:19 AM
முதல்வர் அறிவிப்பு... டில்லி மாநிலத்தில் டீசல் மீதான வாட் வரி குறைக்க போவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனையடுத்து டீசல் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஏப். மற்றும் மே மாதம் வரையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் , டீசல் விலையை உயர்த்தாமல் இருந்து வந்தன.
கடந்த ஜூன் மாதம் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் விலையை உயர்த்த துவங்கின. நேற்று பெட்ரோல் ரூ. 83.63க்கும் , டீசல் ரூ.78.86க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தலைநகர் டில்லியை பொறுத்த வரையில் டீசல் ரூ. 81.94 என விலைநிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையில் அமைச்சரவை
கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டீசல் மீதான வாட் வரியை குறைப்பது என
முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் முதல்வர்
கூறியதாவது:
டில்லி உட்பட பல்வேறு நகரங்களில் நாட்டில் முதன்முறையாக
பெட்ரோலை விட டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஜூன் மாதம்
ஒன்றாம் தேதி டீசல் விலை ரூ.69 ஆக இருந்தது.
மாத இறுதியில் ரூ.80 ஆக
அதிகரித்து உள்ளது.டில்லியில் வசித்து வரும் 2 கோடி மக்கள் கொரோனாவை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் நாம்
பொருளாதாரத்தை எப்படி புதுப்பிப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
வணிகத்துறை, தொழில் துறைகள் மூடப்பட்டிருப்பதால் பலர்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு தொழில்கள், வர்த்தகர்கள் டீசல் விலை
உயர்வால் மக்களின் வரவு செலவு திட்டத்தைபாதிப்பதாகவும், வர்த்தக பணிகள்
பாதிப்பாதாகவும் இதன் காரணமாக டீசல் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை
விடுத்தன. இதனையடுத்து டீசல் மீதான வாட் வரி 30 சதவீதத்தில் இருந்து 16.75
சதவீதமாக குறைப்பது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதனையடுத்து டீசல் விலை ரூ. 8 வரையில் குறையும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.