தாராவில் குறைந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு
By: Monisha Tue, 02 June 2020 5:40:36 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 24 மணி நேரத்தில் 8,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மும்பை தாராவில் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்து வருவதால் அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இருந்தாலும் கடந்த சில நாட்களாக தாராவில் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1830 ஆக உயர்ந்துள்ளது. 71 பேர் உயிரிழந்துள்ளனர்.