துரஹள்ளி வனப்பகுதியில் நாய்களால் உயிரை இழக்கும் மான்கள்
By: Nagaraj Sun, 30 Aug 2020 12:48:23 PM
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து 20 கி. மீ. தொலைவில் உள்ள துரஹள்ளி வனப்பகுதியில் நாய்களால் மான்கள் துரத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதில் சில மான்கள் நாய்களிடம் சிக்கி உயிரை விட்டு வருகின்றன.
அந்த வகையில் நாயால் துரத்தப்பட்டு வந்த மானை பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர மக்கள் தெருவில் பார்த்துள்ளார்கள். மிகவும் களைத்துப்போன நிலையில், காயங்களுடன் காணப்பட்ட மான் பற்றி உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
முதல்கட்டமாக 15 பேர் கொண்ட வனத்துறை ஊழியர்கள் காட்டில் இருந்து
துரத்தப்பட்ட மானைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கூடுதலாக 13
தன்னார்வலர்களும் தேடுதலில் சேர்ந்துகொண்டனர். ஒரு மணி நேரத்தில் மான்
பிடிக்கப்பட்டது. நகரில் ஓர் உணவகத்தில் மறைவதற்காகச் சென்றபோது அது
கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சிகிச்சையளிக்கப்பட்டு அந்த மான்
மீண்டும் காட்டில் விடப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதற்கு முன்பு
பல சம்பவங்களில் எண்ணற்ற மான்கள் உயிரிழந்துள்ளன என்பதும்
குறிப்பிடத்தக்கது. மான்களை வேட்டையாடும் காட்டு நாய்களைக் கட்டுப்படுத்தும் பணியில் தற்போது வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.