டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் வைக்க அனுமதி
By: Nagaraj Mon, 27 Feb 2023 10:38:59 PM
டெல்லி: சிபிஐ காவலில் வைக்க அனுமதி... டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா நேற்று சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ, அவர்களின் கேள்விகளுக்கு அவர் சரியான பதில் அளிக்காததால் நேற்று மாலை கைது செய்தனர்.
மணீஷ் சிசோடியா கைதுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று, மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 5 நாள் காவலில் வைக்க சிபிஐ மனு தாக்கல் செய்தது.
பின்னர், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணையின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மனிஷ் சிசோடியா மழுப்பலான பதில்களை அளித்ததாக சிபிஐ வாதிட்டது. மணீஷ் சிசோடியா மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று சிசோடியாவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி நீதிமன்றம் சிசோடியாவை மார்ச் 4 வரை சிபிஐ காவலில் வைக்க அனுமதி அளித்தது. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மார்ச் 4ம் தேதி மணீஷ் சிசோடியாவை மீண்டும் ஆஜராக உத்தரவிட்டது.