பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்து டெல்லி அரசு உத்தரவு
By: Nagaraj Tue, 21 Feb 2023 11:21:38 AM
டெல்லி: தடை பிறப்பித்தது... பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பைக் டாக்ஸி சேவைகள் சமீப காலமாக நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பிரபலமாகி வருகிறது.
ரேபிடோ, ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் ஆட்டோ, கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுடன் பைக் டாக்ஸி சேவையையும் வழங்கி வருகின்றன. இந்த சேவையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
முறையான உரிமம் இல்லாமல், சாலை விதிகளை மதிக்காமல் பலர் பைக் டாக்சி சேவையை இயக்குவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், ரேபிடோ, ஓலா, ஊபர் உள்ளிட்ட இருசக்கர வாகன சேவைகளுக்கு தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தடையை மீறினால் ரூ.10,000 வரை அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். வாடகை அல்லது வெகுமதி அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் மீறலாகக் கருதப்படுகிறது, மேலும் தொடர்ந்து மீறினால் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பைக் டாக்சிகள் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டாலும், பயணிகளின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என அரசு விளக்கம் அளித்துள்ளது