டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு
By: Karunakaran Sun, 06 Dec 2020 2:05:33 PM
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் சார்பில் டெல்லி சலோ போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி பேரணியாக திரண்டு டெல்லி நோக்கி படையெடுத்தனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
விவசாயிகள் டெல்லி போராட்டத்தினை முன்னிட்டு 6 மாத காலத்திற்கு தேவையான உணவு பொருட்களையும், டிரக்குகள், டிராக்டர்களில் சுமந்து கொண்டு சென்றனர். போராட்டத்திற்கு சுமூக தீர்வு காணப்படும் வகையில், மத்திய வேளாண் மந்திரி என்.எஸ்.தோமர் தலைமையில் கடந்த 1 மற்றும் 3-ம் தேதிகளில் அரசு சார்பிலான பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே நடந்த 4-ம் கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படாத நிலையில், மீண்டும் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு காணப்படவில்லை. இதையடுத்து, மத்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப வரும் 9-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் விவசாய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழக மாணவர் ராகுல் ஜெய்னா என்பவர் கூறுகையில், பகலில் மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் போஸ்டர்களை தயாரித்தோம். அதன்பின் உணவு வழங்கினோம். இந்த வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. அவர்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என தெரிவித்தார்.