- வீடு›
- செய்திகள்›
- டீ விற்பவராக வாழ்க்கையை தொடங்கி பிரதமராக உச்சம் தொட்டுள்ள நரேந்திர மோடி குறித்த ருசிகர தகவல்கள்
டீ விற்பவராக வாழ்க்கையை தொடங்கி பிரதமராக உச்சம் தொட்டுள்ள நரேந்திர மோடி குறித்த ருசிகர தகவல்கள்
By: Karunakaran Thu, 17 Sept 2020 6:52:31 PM
இன்று இந்திய பிரதமர் மோடிக்கு 70-வது பிறந்த நாள் ஆகும். 1950-ம் ஆண்டு இதே நாளில் குஜராத் மாநிலம் வாத் நகரில் தாமோதர்தாஸ் மோடி- ஹிராபென் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். குஜராத் பல்கலைக்கழகத்தில் 1983-ம் ஆண்டு தொலைதூர கல்வி மூலம் எம்.ஏ. அரசியல் அறிவியல் படித்த அவர் 1993-ம் ஆண்டு அமெரிக்காவில் 3 மாத டிப்ளமோவான பப்ளிக் ரிலேஷன்ஸ், இமேஜ் மேனேஜ்மெண்ட் படிப்பையும் முடித்துள்ளார்.
பிரதமர் மோடி 1966-ம் ஆண்டு ராமகிருஷ்ணா மடத்தில் ஆத்மஸ்தானந்தா சுவாமியை சந்தித்து துறவியாக விரும்புவதாக கூறினார். ஆனால் அவரோ மக்களுக்கு சேவையாற்றும்படி கூறினார். இமயமலை பகுதியில் சுற்றி திரிந்து இளம் வயதிலேயே பற்றுகளில் இருந்து விடுபட்டார். சிறு வயதில் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையும் இருந்தும் நிறைவேறவில்லை. 1965-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தது. அப்போது மோடிக்கு 15 வயது. அந்த வயதில் அவர் ராணுவ வீரர்களுக்கு ரெயில் நிலையத்தில் டீ கொடுத்து உதவினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்து பிரதமர் ஆன முதல் தலைவர் மோடிதான். ஜனாதிபதி மாளிகை முன்பு திறந்த வெளி அரங்கில் பதவி ஏற்ற முதல் பிரதமரும் அவர்தான். அயோத்தி ராமஜென்ம பூமிக்கு சென்ற முதல் பிரதமரும் மோடிதான். குஜராத்தின் முதல்வராக மோடி பதவி ஏற்ற போது “எப்போதும் சி.எம். ஆக இருப்பேன்” என்றார். ஆங்கிலத்தில் சி.எம். என்றால் காமன்மேன் (சாதாரணமனிதன்) என்பது பொருளாகும். பிரதமராக இருக்கும் போதும் ஒருநாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. மோடி காலை முதல் நள்ளிரவு வரை பணியாற்றுவது வழக்கம். அவர் அலுவலகத்தில் பியூன் முதல் முதன்மை செயலாளர் வரை யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தியதில்லை.
பள்ளியில் படித்த போது ஷூ பாலிஷ் வாங்க வசதி இல்லாததால் ஆசிரியர்கள் எழுதிய பின் தூக்கி ஏறியும் சாக்பீஸ் துண்டுகளை தண்ணீரில் ஊற வைத்து அதை பாலிஷ் ஆக பயன்படுத்துவார். சிறுவயதிலேயே அவர் உடை விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவார். சிறுவனாக இருக்கும் போது முதலை குட்டி ஒன்றை வீட்டுக்கு கொண்டு வந்தார். தாய் கண்டித்ததால் அதை மீண்டும் குளத்துக்குள் விட்டார். குஜராத் முதல்வராக மோடி பதவி ஏற்ற போது ‘லஞ்சம் வாங்காதே’ என அவரது தாய் ஆசி வழங்கினார். இதை தன் வாழ்வில் கடை பிடிக்கிறார். தேர்தல் பிரசாரத்தின் போது தாய்நாட்டுக்கு ஓட்டளியுங்கள் என்று கேட்பார். தனது பேச்சை முடிக்கும் போது ‘பாரத் மாதா கி ஜே, ஜெய்ஹிந்த். வந்தே மாதரம்‘ என முழக்கமிடுவார்.