- வீடு›
- செய்திகள்›
- மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ‘கம்ப்யூட்டர் பாபா’ ஆசிரமத்தின் ஆக்கிரமிப்பு பகுதி இடித்து அகற்றம்
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் ‘கம்ப்யூட்டர் பாபா’ ஆசிரமத்தின் ஆக்கிரமிப்பு பகுதி இடித்து அகற்றம்
By: Karunakaran Mon, 09 Nov 2020 11:18:33 AM
மத்தியபிரதேச மாநிலத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான பா.ஜனதா அரசில் துணை மந்திரியாக பொறுப்பு வகித்த, நாம்தேவ் தியாகி. கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் பா.ஜனதா அரசில் இருந்து விலகினார். பின்னர், காங்கிரசில் இணைந்தார். அதன்பின், நதிகளுக்கான அரசாங்க அறக்கட்டளையின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து பா.ஜனதாவில் இணைந்ததால், கமல்நாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைய உதவிய அந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், சமீபத்திய இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டனர். அவர்களை துரோகிகள் என்று அழைத்த நாம்தேவ் தியாகி, இடைத்தேர்தலின்போது, ஜனநாயகத்தை காப்போம் என்ற பிரசார இயக்கத்தைத் தொடங்கி நடத்தினார்.
இந்தூரின் புறநகர் பகுதியில் உள்ள ஜம்பூர்தி ஹப்சி கிராமத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் நாம்தேவ் தியாகியின் ஆசிரமம் அமைந்திருக்கிறது. அங்கு 2 ஏக்கர் அரசாங்க நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதும், அதில் சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் அரசு அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதனால் ஆசிரம நிர்வாகிகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்த வருவாய்த் துறை, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாமியார் நாம்தேவ் தியாகியும், அவரது உதவியாளர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர் ஆசிர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதியில் ஒரு கோசாலையும், மத வழிபாட்டிடமும் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.