கொரோனா ஆலோசனை கூட்டத்திற்காக திருமணத்தை தள்ளிவைத்த டென்மார்க் பிரதமர்
By: Nagaraj Fri, 26 June 2020 6:53:59 PM
திருமணத்தை தள்ளி வைத்த பிரதமர்... கொரோனா நெருக்கடி தொடர்பாக விவாதிக்க, ஐரோப்பிய கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளார்.
டென்மார்க்கில் இதுவரை கொரோனா தொற்றால் 12,836 பேர் பாதிக்கப்பட்டனர். 603 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தது.
இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரலில் மேற்கத்திய நாடுகளில் முதல்நாடாக டென்மார்க் கட்டுப்பாடுகளை தளர்த்தியிருந்தது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில், வரும் ஜூலை 17ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு பின்னர் முதன்முறையாக ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் நேரடியாக சந்தித்து, ஐரோப்பிய பட்ஜெட் மற்றும் கொரோனா நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதனிடையே டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன், தனது வருங்கால கணவர் போ
டெங்பெர்க் புகைப்படத்தை பகிர்ந்து 'நான் இவரை தான் திருமணம் செய்து கொள்ள
இருக்கிறேன். ஜூலை மாதம் சனிக்கிழமையன்று பிரஸ்ஸல்ஸில் கவுன்சில் கூட்டம்
நடக்கும் அதே தினத்தில் எங்கள் திருமணத்திற்கு நாங்கள்
திட்டமிட்டிருந்தோம்.
ஆனால், நான் எனது வேலையைச் செய்ய வேண்டும்
மற்றும் டென்மார்க்கின் நலன்களை பாதுகாக்க வேண்டும். போவுக்கு 'ஆம்' என்று
சொல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன்' என பதிவிட்டுள்ளார். இடது சோசலிச ஜனநாயக
கட்சியை சேர்ந்த 41 வயதாகும் மெட்டே பிரடெரிக்சன், கடந்தாண்டு
டென்மார்க்கின் இளம் பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.
கடந்தாண்டு
ஆகஸ்டு மாதம், கிரீன்லாந்தை வாங்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்
அறிவித்தார். டிரம்பின் யோசனை மிகவும் அபத்தமானது என மெட்டே விமர்சித்ததை
அடுத்து இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.