ஆகஸ்டு 3-ந்தேதி முதல் விலையில்லா பாட புத்தகங்கள் வழங்க கல்வித்துறை அறிவிப்பு
By: Monisha Fri, 31 July 2020 09:24:31 AM
அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் 2019-20-ம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அம்மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல தகுதியுடைவர்கள் ஆகின்றனர்.
இவர்களில் 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் அதே பள்ளியில் கல்வித்தொடர வாய்ப்பு உள்ளதால் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு ஆகஸ்டு 3-ந்தேதி முதல் விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வழங்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாட புத்தகங்கள் பெறுவற்காக வரும் மாணவர்கள், பெற்றோர் முகக்கவசம் அணிந்து வருமாறு தெரிவிக்கவேண்டும். மேலும் பள்ளிவளாகங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். ஒரு மணிநேரத்துக்கு 20 மாணவர்கள் என கால அட்டவணை பின்பற்றி பாட புத்தகங்கள் வழங்க வேண்டும்.
கொரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாணவர் எவரேனும் இருந்தால் தனிமைப்படுத்தப்பட்ட கால அளவு முடிந்தபிறகு பள்ளிக்கு வரவழைத்து வழங்கப்படவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.