டெல்லியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக துணை முதல்-மந்திரி அறிவிப்பு
By: Karunakaran Sat, 11 July 2020 6:08:31 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க கடந்த 25-ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் நடைபெறவிருந்த பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால், கொரோனா தாக்கம் அதிகமாகி வருவதால், தேர்வுகளை ரத்து செய்ய எதிர்க்கட்சி தலைவர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, டெல்லியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா அச்சுறுத்தலால் டெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தேர்வுகள் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யும் மதிப்பீடு அளவுகளை அடிப்படையாக கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். கொரோனா காரணமாக மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டு வருவதால், பாடத்திட்டத்தை மத்திய அரசு மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.