துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு
By: vaithegi Tue, 20 Sept 2022 10:57:17 AM
சென்னை: தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் துணை பொது செயலாளர் பதவியை ராஜினமா செய்ததாக தகவல்கள் பரவி வந்தன. நேற்று சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை.
இதனை அடுத்து துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சி பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடம் தெரிவித்துவிட்டேன். தலைவர் கலைஞர் மறைவுக்குப் பின் அவர்களின் விருப்பத்தின்படி தலைவர் தளபதி அவர்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழக பணிகளை மட்டும் செய்து வந்தேன்.
2021 நாடாளுமன்ற பொது தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசு, கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது.
மேலும் இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்டு 29ம் தேதியன்று பதிவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது கடிதத்தை அனுப்பிவிட்டேன். என குறிப்பிட்டுள்ளார். திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவியில் மகளிர் பிரதிநித்துவம் என்ற அடிப்படையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், தற்போது விலகுவதாக அறிவித்துள்ளார்.